ஈழத் தமிழரைக் காக்க சென்னையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.10.08) நடத்தப்படவுள்ள மனித சங்கிலிக்கு அணி திரள்வீர் என்று தமிழ்நாடு உள்ளாட்சித்துறை அமைச்சரும் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளருமான மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறிலங்கா இராணுவத் தாக்குதல்களிலிருந்து இலங்கை வாழ் தமிழ் இனத்தாரைப் பாதுகாத்திட, அங்கே உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்பட, தமிழர்கள் அனைவரும் ஒரே உணர்வில் நின்று விடை காண வேண்டும் என்ற வேண்டுகோளை- தலைமைக் கழகத்தின் சார்பில் "இலங்கைப் பிரச்சினையில் கழகத்தின் நிலையும்- மத்திய அரசுக்கு வேண்டுகோளும்" எனும் பொருளில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததோடு,
சிறிலங்கா இராணுவத் தாக்குதல் தமிழினப் படுகொலை இவைகளை தடுத்து நிறுத்திட, தமிழர்கள் அனைவரும் பிரதமருக்கு தந்தி அனுப்பிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதன் பேரில் லட்சக்கணக்கான தந்திகள் அனுப்பப்பட்டுள்ள நிலையிலும், இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டு அனைத்து கட்சிக்கூட்டத்தினையும் கூட்டி, இலங்கையில் இயல்பு நிலை திரும்பிட - இந்தியப் பேரரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திடவும், சிறிலங்கா அரசுக்கு, இந்திய அரசு ஆயுத உதவி வழங்கிடுவதை உடனடியாக நிறுத்திடவும், பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உணவு- உடை மருந்து போன்றவற்றை மத்திய அரசு வழங்கிட வேண்டும்.
தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கும் சிறிலங்கா கடற்படையினரின் செயலுக்கு நிரந்தர தீர்வுதான் வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று சென்னையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.10.08) நடைபெறும் மாபெரும் மனிதச் சங்கிலி அணிவகுப்பு.
தமிழர்கள் அனைவரும் இந்த மனிதச் சங்கிலி அணிவகுப்பில் பங்கேற்பர் எனினும், இளைஞர் அணியினர் பெருமளவில் பங்கேற்று தமது உணர்வை வெளிப்படுத்திட வேண்டும்.
அதற்கேற்ப, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தத்தமது பகுதிக்கு உட்பட்ட இளைஞர்களை பெருமளவில் திரட்டி வந்து அணிவகுத்திடச் செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.